ராம்பூர் (உபி): வரும் 2014-ம் ஆண்டு இளைஞர்களின் அரசு பதவி ஏற்கும் என்று காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தி கூறினார். உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று ராகுல் காந்தி பேசுகையில், "நில ஆர்ஜித சட்டம், உணவு பாதுகாப்பு சட்டம் போன்ற ஏழை மக்களுக்கான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் நல்ல திட்டங்களை எதிர்க் கட்சிகள் முடக்க முயற்சித்தன.
ஆனால், இவற்றை எல்லாம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு அர்ப்பணிப்பு உணர்வுடன் நிறைவேற்றி காட்டியுள்ளது. இந்தியாவில் ஒருவர் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால், ஏழைகளுக்கு உதவ வேண்டும். ஏழைகளின் மேம்பாட்டுக்கு உழைக்க வேண்டும். ஆனால், எதிர்க் கட்சியினரோ ஏழைகளை சந்திக்கப் போவதே இல்லை.
மாறாக, ஊடகங்கிளில் பேட்டி அளிப்பதில்தான் குறியாக உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் நமது நாட்டில் வெறும் வயிற்றுடன் பட்டினியாக தூங்கிய நிலைமையை உணவு பாதகாப்பு சட்டம் மாற்றியுள்ளது. இதைவிட பெரிய முன்மாதிரி திட்டம் எதுவும் வந்தவிட முடியாது. இந்த திட்டத்தை கொண்டுவர பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருடன் சேர்ந்து நானும் 3 ஆண்டுகளாக போராடினேன். அரை ரொட்டி சாப்பிடுங்கள். காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்துங்கள் என்ற முழங்கங்கள் மாறி 'எங்கள் வயிறு நிறைந்திருக்கும். காங்கிரஸ் ஆட்சியில் நிலைத்திருக்கும்' என்ற முழக்கம் உருவாகியுள்ளது.
2014-ம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஏழைகள் மற்றும் சாமான்ய மக்களுக்கான ஒரு அரசு மீண்டும் அமைவதை நீங்கள் பார்க்கதான் போகிறீர்கள். அந்த அரசு இளைஞர்களின் அரசாக இருக்கும். அந்த அரசு நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும். வரிசையில் நிற்கும் கடைசி நபருக்கும் அதிகாரமளிக்கும் வகையில் அந்த மாற்றம் இருக்கும்," என்றார்.
No comments:
Post a Comment